கோவை: போலீசாரிடம் இருந்து தப்பிக்க மேம்பாலத்தில் இருந்து குதித்த பிரபல ரவுடியின் கால்கள் முறிந்தன. கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் சுஜி மோகன் (30). இவர் மீது கோவையை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் (22) கொலை வழக்கு உட்பட 11 வழக்குகள் உள்ளன. பல்வேறு பகுதியில் அடிதடி மோதல், மிரட்டல், கஞ்சா விற்பனை போன்றவற்றில் சுஜி மோகனுக்கு தொடர்பு உள்ளது. கடந்த வருடம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கியிருந்த சுஜி மோகனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வந்தவர் சமீபத்தில் சிங்காநல்லூர் பகுதியில் ஆட்டோ டிரைவர் கணேசனிடம் கத்தி காட்டி மிரட்டி பணம் பறித்தார்.
இதையடுத்து இவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து மீண்டும் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுஜி மோகன், கணபதி டெக்ஸ்டூல் மேம்பாலம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக போலீசாரின் ரோந்து வாகனம் வந்தது. இதை பார்த்த சுஜி மோகன் தன்னை பிடிக்கத்தான் போலீசார் வருகிறார்கள். அவர்களிடம் சிக்கிவிடக்கூடாது என நினைத்து பல அடி உயர பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு இரு கால்களிலும் காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.