Friday, September 20, 2024
Home » பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் உரிமைக்குழு நோட்டீஸ் ரத்து எதிர்த்த வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு

பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் உரிமைக்குழு நோட்டீஸ் ரத்து எதிர்த்த வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு

by Karthik Yash

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸ் உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்இளங்கோ ஆஜராகி, 2017ல் அதிமுகவில் பன்னீர்செல்வம் அணியினர் உருவானது, 18 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தியதை சுட்டிக்காட்டி ஆட்சி கவிழ்ந்து விடக் கூடும் என்ற காரணத்தால் இந்த உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அரசியலமைப்பு சட்டப்படி, பதவிக்காலம் முடிந்ததும், சட்டமன்றம் கலைந்து விடுகிறது. நிலுவையில் உள்ள மசோதாக்கள், உரிமை மீறல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் காலாவதியாகி விடுகின்றன என்று பல்வேறு உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தெரிவித்துள்ளன.

தற்போதைய சட்டமன்றம் இந்த விவகாரத்தை விசாரிக்க முடியாது. உள்நோக்கத்துடன் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. முந்தைய உரிமைக் குழு தலைவராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமன், தற்போதும் உரிமைக்குழு உறுப்பினராக இருந்தாலும் அவர் தற்போதைய குழுவை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று வாதிட்டார். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆ.செல்வேந்திரன் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மசோதாக்கள் காலாவதியாகலாம். ஆனால் உரிமை மீறல் போன்ற நடவடிக்கைகள் எப்படி காலாவதியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த நடவடிக்கைகள் முடிவுக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இந்த வழக்கில் நாளை (புதன்கிழமை) பிறப்பிப்பதாக தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

4 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi