மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் குரு வட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்கான வாலிபால் போட்டிகள் படாளம் அருகே உள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை நடந்தது. இந்தப் போட்டிக்கு புக்கதுறை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணி தலைமை தாங்கினார். மேலும், குருகுலம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருக்குமரன் முன்னிலை வகித்தார்.
உடற்கல்வி ஆசிரியர் அனிதா அனைவரையும் வரவேற்றார். இதில் கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி முதல்வர் காசிநாத பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றி போட்டியை தொடங்கி வைத்தார்.இந்தப் போட்டிகளில் மதுராந்தகம் குரு வட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 425க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.