புதுடெல்லி: யுஜிசி- நெட் தேர்வை ரத்து செய்த அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த ஜூன் 18ம் தேதி யுஜிசி நெட் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக வந்த தகவல்களால் தேர்வு முறையின் நேர்மையை கருத்தில் கொண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் மற்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது.யுஜிசி-நெட் தேர்வு ரத்து செய்த ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து வழக்கறிஞர் உஜ்வல் கவுர் உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்திருந்தார். தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கடும் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. முக்கியமான இந்த தேர்வுக்காக மாணவர்கள் ஏராளமாக பணம் செலவு செய்துள்ளனர். இதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட்,நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கூறுகையில்,‘‘ நீங்கள் (வழக்கறிஞர்) ஏன் இங்கு வரவேண்டும். இந்த வழக்கிற்காக மாணவர்கள் வரட்டும் பார்க்கலாம்’’ என்றார். நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறுகையில், இந்த வழக்கு ஒரு வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் சில சட்ட ரீதியான பிரச்னைகளை எழுப்பியுள்ளார். நேரடியாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் மனுவை தாக்கல் செய்யவில்லை. எனவே, இதை ஏற்க முடியாது என்று கூறி தள்ளுபடி செய்தனர்.