சென்னை: சில தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான தடுப்பூசியை இலவசமாக வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தடுப்பூசிகளை இலவசமாக பெற்றுக்கொள்ள திட்டம் விரைவில் தொடங்கப்படும். பிறந்த குழந்தைகளுக்கு முதல் மாதத்தில் இருந்து 16 தவணை செலுத்தப்படும் தடுப்பூசிகளை இலவசமாக பெறலாம்.
தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான தடுப்பூசி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், தனியாரை பொறுத்தவரை தற்போது ஒரு அரசாணையை பிறப்பித்துள்ளோம். அதன்படி, குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கு சில வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன.
தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசியை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும். அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும். இவற்றுடன் பொதுமக்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்க மாட்டோம் என்று உறுதி அளித்தால் அதன் அடிப்படையில் சில மையங்கள் திறக்கப்படும். விரைவில் அறிவிப்புகள் வெளியாகும். இது முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தை போல பயன்பெற முடியும்.
அதேசமயம் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் இந்த திட்டம் இல்லை. ஏனெனில் நாம் தடுப்பூசி அளித்தால் அதை குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்திருக்கும் வகையில் வசதிகள் இருப்பது அவசியம் என்று செல்வ விநாயகம் தெரிவித்தார். குழந்தைகளுக்கு தற்போது 18 வயது வரை 16 தவணைகளாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக,
பிசிஜி – குழந்தை பிறந்தததும் அல்லது ஒரு வயதிற்குள் போட வேண்டும்.
ஹெப்பாடிட்டிஸ் பி – குழந்தை பிறந்ததும் அல்லது 24 மணி நேரத்தில் போட வேண்டும்.
ஓ.பி.வி-0 – குழந்தை பிறந்ததும் அல்லது முதல் 15 நாட்களில் போட வேண்டும்
ஓ.பி.வி 1, 2, & 3 – 6 வாரங்கள், 10 வாரங்கள், 14 வாரங்களில் போட வேண்டும்
ரோட்டா வைரஸ் – 6 வாரங்கள், 10 வாரங்கள், 14 வாரங்களில் போட வேண்டும்
ஐபிவி – 6 மற்றும் 14 வாரங்களில் தலா இரண்டு டோஸ்கள் போட வேண்டும்.
மீசில்ஸ் – 9 முதல் 12 மாதங்களுக்குள் போட வேண்டும்
ஜே.இ-1 – 9 முதல் 12 மாதங்களுக்குள் போட வேண்டும்
வைட்டமின் ஏ 1வது டோஸ் – 9 மாதங்கள் முடிந்ததும் போட வேண்டும்.