பெங்களூரு: ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையில் நீதிபதிகள் மதிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அப்போது பேசுகையில், ‘பெரும்பாலான வழக்குகள் உச்சநீதிமன்றத்துக்கு வந்திருக்கவே கூடாது. விசாரணை நீதிமன்றங்களில் ஜாமீன் பெற வேண்டியவர்களுக்கு அங்கு ஜாமீன் கிடைக்காததால், அவர்கள் உயர் நீதிமன்றங்களை அணுக வேண்டிய நிலை ஏற்படுகிறது.
உயர் நீதிமன்றங்களிலும் ஜாமீன் கிடைக்காவிட்டால், உச்சநீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. இந்த தாமதமானது எந்தவித காரணமோ, நியாயமில்லாதது போலவோ தென்படுகிறது. அதனால் கைது நடவடிக்கைகளை எதிர்கொள்வோரின் பிரச்னையை சிக்கலாக்குகிறது.வழக்குகளில் விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் எந்தவொரு நிவாரணமும் சந்தேகத்துடன் பார்க்கப்படுவதால், முக்கிய குற்ற வழக்குகளில் ஜாமீன் வழங்குவதை தவிர்த்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று விசாரணை நீதிபதிகள் கருதுகின்றனர். ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையில் நீதிபதிகள் மதிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும்’ என்றார்.