♦ சிவபெருமான், அகத்தியர், அருணகிரி நாதர் மூவரும் முறையே தேவதேவர், முனிசிரேஷ்டர், நரசிரேஷ்டர் என்று முருகனருள் பெற்று போற்றப்படுகின்றனர்.
♦ பன்னிரண்டு ஆண்டுகள் முருகப் பெருமானை நோக்கி கடுந்தவம் இருந்து நாரதமுனிவர், சப்தரிஷிகளைவிட சிறந்தவராகத் திகழும் வரம் பெற்றார்.
♦ முருகப் பெருமானின் திருமணத்தை தரிசித்த பெரும் பேறு பெற்றவர், முசுகுந்த சக்ரவர்த்தி. திருவிடைக்கழி திருத்தலத்தில் முருகன் இவருக்கு உபதேசம் செய்தருளினான்.
♦ பழநி முருகன், சிவகிரி மேல் வீற்றிருப்பதைக் கண்டு வெகுண்டு அவருடன் போரிடச் சென்ற இடும்பாசுரன் பின் முருகனின் மகிமை உணர்ந்து அவருக்கே காவல் தெய்வமாக அதே பழநியில் திகழ்கிறான்.
♦ பழமுதிர்சோலையில் நாவல் பழ மரத்தின் மீது அமர்ந்து ‘சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என குமரக் கடவுள் கேட்டு ஔவையாரை திகைக்க வைத்தான் முருகன்.
♦ ஆதிசங்கரருக்கு, காசநோய் தாக்கியது. அலைகடல் தாலாட்டும் கரையோரம் கோயில் கொண்டுள்ள செந்திலாண்டவனை அவர் சுப்ரமண்யபுஜங்கம் எனும் துதியால் துதித்து, பன்னீர் இலை விபூதியைத் தரித்த உடனேயே முருகப் பெருமானின் திருவருளால் அவர் நோய் நீங்கியது.
♦ திருவண்ணாமலையில் சம்பந்தாண்டான் எனும் தேவி உபாசகருக்கும் அருணகிரிநாதருக்கும் நடந்த போட்டியில் அருணகிரிக்காக முருகப்பெருமான் கம்பத்தில் தோன்றியருளினார். அவரே கம்பத்திளையனார் என்று இன்றும் போற்றப்படுகிறார்.
♦ ராமலிங்கவள்ளலாருக்கு அவர் வீட்டின் கண்ணாடியில் திருத்தணிகை முருகப்பெருமான் தரிசனமளித்து ஆட்கொண்டார். இதை ‘சீர் கொண்ட தெய்வ வதனங்கள்’ எனும் திருவருட்பா பாடல் மூலம் அறியலாம்.
♦ திருத்தணி முருகன் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதருக்கு திருத்தணியில் கற்கண்டை வாயில் போட்டு ‘ஸ்ரீநாதாதி குருகுஹோ’ எனும் கீர்த்தனையைப் பாட வைத்தவர்.
♦ பிறந்து ஐந்து ஆண்டுகள் வரை பேச்சு வராமல் இருந்த குமரகுருபரர் திருச்செந்தூர் முருகனை தரிசித்து ஒரு மண்டலம் விரதம் இருந்து, உலகமே புகழும் வண்ணம் கவி பாடும் திறமை பெற்றார்.
♦ மதுரை மாரியப்ப சுவாமிகள் ‘முருகப்பெருமானைப் பாடாத தம் நாவும் ஒரு நாவா?’ என நினைத்து தன் நாக்கை அறுத்தெறிந்தார். பின்முருகப்பெருமான் அருளால் அந்த நாக்கு வளர்ந்து, அவர் தமிழிசை பாடுவதில் வல்லவரானார்.
♦ மதுரை மீனாட்சியின் அருளாணைப்படி சிதம்பர சுவாமிகள் திருப்போரூர் முருகனை பனைமரத்தில் சுயம்புவாக பிரதிஷ்டை செய்து முருகனருள் பெற்றார். பிராகார வலம் வரும்போது சிதம்பர சுவாமிகளால் நிறுவப்பட்ட சக்கரத்தைக் காணலாம். இது முருகப்பெருமானுக்கு இணையாக வழிபடப்படுகிறது.
♦ திருப்புகழை உலகில் பரப்பவே பிறப்பெடுத்தவர் வள்ளிமலை சுவாமிகள். முருகப்பெருமானின் திருவருளால் பொங்கி எனும் பெயரில் வள்ளிநாயகியை வழிபட்டு வள்ளியை நேரில் தரிசித்த பெருமையும் பெற்றவர். அந்த பொங்கியே திருமுல்லைவாயிலில் வைஷ்ணவியாக திருவருள் புரிகிறாள்.
♦ வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப்பெருமான் திருவருளை பரிபூரணமாகப் பெற்றவர். பற்பல துதிகளை முருகப்பெருமான் மேல் இயற்றியவர். கௌமார மடத்தை நிறுவியவர்.
♦ பெங்களூரு அல்சூர் பகுதியில் ஏரிக்கரை ஓரம் உள்ள முருகன் ஆலயத்தில் ஒடுக்கத்தூர் சுவாமிகள் எனும் மகானின் சமாதி உள்ளது. ஒடுக்கத்தூர் சுவாமிகள் இத்தல முருகனின் பேரருளைப் பெற்றவர்.
♦ முருகப் பெருமானின் திருவருளைப் பெற்று முருக நாமமே பேச்சாக, சுவாசமாக வாழ்ந்த மகான் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். வயலூர் கந்தவேளை எந்த வேளையும் போற்றிப் புகழ்ந்த புண்யமூர்த்தி இவர்.