புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை தொடர்ந்து, பாஜ முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இதில், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா,ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்து கொண்டனர்.
சில மாநிலங்களின் துணை முதல்வர்களும் கலந்து கொண்டனர். நேற்று நடந்த 2ம் நாள் கூட்டத்தில் மபி முதல்வர் மோகன் யாதவ்,உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அருணாச்சல் பிரதேச முதல்வர் பெமா காண்டு, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், சட்டீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து வட்டாரங்கள் கூறுகையில், இந்த கூட்டத்தில் தங்கள் மாநிலங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர்கள் விளக்கினர். கூட்டத்தில் மோடி பேசும்போது,பாஜ கட்சி நல்லாட்சிக்காகவும், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும் அயராது பாடுபட்டு வருகிறது. எனவே, பாஜ அரசுகள் நடக்கும் மாநிலங்களின் திட்டங்கள் நல்லாட்சிக்கு உதாரணமாக கருதப்பட வேண்டும். சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரை குறிப்பாக ஏழைகளுக்கு மாநில அரசுககள் உதவ வேண்டும் என்று கேட்டு கொண்டார் என தெரிவித்தன.