பந்தலூர்: கேரளா மாநிலம் மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக வயநாடு மாவட்டம் கம்பமலை எஸ்டேட் பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் முகாமிட்டு வரும் மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சோமன் உள்பட மாவோயிஸ்ட்கள் தோட்டத்தொழிலாளர்களை ரகசியமாக சந்தித்து பேசி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இந்த நிலையில் அவர்கள் மலப்புரம் மாவட்டம் சொரனூர் பகுதியில் மாவோயிஸ்ட் சோமனை நேற்று காலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் சோமன், வயநாடு மாவட்டம் கல்பட்டா பகுதியை சேர்ந்தவர். மாவோயிஸ்ட் அமைப்பில் முக்கிய தலைவராக இருந்து வருகிறார். இவரிடம் நக்சல் தடுப்பு அதிவிரைவுப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாவோயிஸ்ட் சோமன் கைது சம்பவம் தமிழக-கேரள எல்லைப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.