வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேற்று கையெழுத்து போட்டார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பைடன் திடீரென விலகினார். இதனால் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
அவருக்கு முன்னாள் அதிபர் ஒபாமா உள்பட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளார். கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உருவாகி உள்ளது. இதையடுத்து அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான அதிகாரபூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் நேற்று கையெழுத்திட்டுள்ளார்.
கமலா ஹாரிஸ் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில்,’அமெரிக்க அதிபர் பதவிக்கான எனது வேட்புமனுவை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் படிவத்தில் கையெழுத்திட்டுள்ளேன். ஒவ்வொரு வாக்குகளையும் பெற கடுமையாக உழைப்பேன். நவம்பரில் நடைபெறவிருக்கும் தேர்தலில், எங்கள் மக்கள் இயக்க பிரசாரம் வெற்றி பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.