தர்மபுரி: கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மெயினருவி அருகே, நடைபாதையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நீரில் அடித்து வரப்பட்டது. ஆற்றில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்ததால், அந்த சடலத்தை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்றும் ஒரு வாலிபர் சடலம் காவிரி ஆற்றில் அடித்து வரப்பட்டது. இதனையும் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘இந்த சடலங்கள் கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் பகுதி, மேகதாது பகுதியில் இருந்து அடித்து வரப்பட்டிருக்கலாம்,’ என்றனர். அடுத்தடுத்த நாட்களில், 2 சடலங்கள் காவிரி ஆற்றில் அடித்து வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.