கொள்ளிடம், ஜூலை 27: கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் கிராமத்தில் மக்களை அச்சுறுத்திய கதண்டுகளை தீயணைப்பு படையினர் அழித்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் கிராமத்தில் தெரு ஓரத்தில் பனைமரம் மற்றும் தென்னை மரத்தில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தன. அப்பகுதியில் செல்பர்களை துரத்தி கடித்து வந்ததால் அப்பகுதியில் இளைஞர்கள் முதல் பெரியோர் வரை ஆண், பெண் அனைவரும் அச்சத்துடன் சென்று வந்தனர். கடந்த சில தினங்களாக காற்று அதிகமாக வீசி வருவதால் கூடுகளிலிருந்து விஷ வண்டுகள் கூட்டம் கூட்டமாக வெளியே பறந்து தெருவில் வந்ததால் மிகுந்த அச்சம் அடைந்தனர்.
எனவே இது குறித்து ஆரப்பள்ளம் ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா முருகானந்தம், சீர்காழி தீயணைப்புத் துறையியினருக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆரப்பள்ளம் கிராமத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீப்பந்தம் தயார் செய்து மண்ணெண்ணெய்யை பயன்படுத்தி தீ வைத்து பனைமரம் மற்றும் தென்னை மரத்தில் கூடு கட்டி வசித்து வந்த ஆயிரக்கணக்கான விஷ வண்டுகளை 2 மணி நேரம் போராடி அழித்தனர். ஆரப்பள்ளம் கிராமத்தில் விஷ வண்டுகள் அழிக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் நிம்மதி அடைந்தனர்.