சித்ரதுர்கா மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று முன்தினம் கர்நாடக தனியார் மருத்துவமனைகள் பதிவு குழுக் கூட்டம் நடந்தது. அப்போது கலெக்டர் டி.வெங்கடேஷ் பேசியதாவது. கர்நாடக தனியார் மருத்துவ நிறுவன சட்டத்தின்படி (கேபிஎம்இ) விதிமுறைகளை மீறும் தனியார் மருத்துவமனை, நர்சிங் ஹோம், ஆய்வகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனைகள் விதிகளின்படி பதிவு செய்து உரிமம் பெறுவது கட்டாயம். பதிவு செய்யாமல் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆயுஷ் கிளினிக்கிற்கு உரிமம் பெற்று அலோபதி சிகிச்சை அளிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு செய்யாமல் செயல்படும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளை கண்டறிய நடவடிக்கை தொடங்க வேண்டும். இதுபோன்ற கிளினிக்குகளை மூட மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நல அலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்காமல் கண்காணிக்க வேண்டும். பொதுமக்களின் சுகாதாரத்தை காக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.