திருமலை : திருப்பதி மலைப்பாதையில் நள்ளிரவில் ஓடும்போது டயர்கள் கழன்று ஓடியதால் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது சொந்த வாகனங்களிலும், அரசு பஸ்களில் மலை பாதையில் செல்வது வழக்கம். இதனால் எப்பொழுதும் மலைப்பாதையில் வாகனங்கள் நிறைந்து காணப்படும்.
இதனால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு தொடர்பான இன்ஜினியரிங் பணிகளுக்கான பொருட்கள் இரவு நேரத்தில் கொண்டு செல்லப்படுவது வழக்கம். அவ்வாறு நேற்று முன்தினம் இரவு இன்ஜினியரிங் பணிகளுக்காக அதிக பாரம் ஏற்றி ஒரு லாரி நேற்றுமுன்தினம் நள்ளிரவில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது மலை பாதையில் இணைப்பு சாலை அருகே வந்தபோது லாரியில் பாரம் தாங்க முடியாமல் திடீரென முன்புற டயர்கள் இரண்டும் தனியாக கழன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அந்த நேரத்தில் வேறு எந்த வாகனங்களும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து தேவஸ்தான போக்குவரத்து துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்து பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்து மற்ற வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் அனுப்பி வைத்தனர். திருப்பதியில் இருந்து திருமலைக்கும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரக்கூடிய வாகனங்கள் உரிய முழு தகுதியுடன் உள்ளதா என ஆய்வு செய்து அனுப்ப வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மலைப்பாதையில் லாரியின் முன்புற சக்கரங்கள் தனியாக கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.