விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியை செல்வகுமாரி தலைமை தாங்கினார். விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ், விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் துரைப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். கடலூர் மாவட்ட ஏடிஎஸ்பி அசோக்குமார், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தொடங்கிய பேரணி சன்னதி வீதி, கடைவீதி, பெண்ணாடம் ரோடு வழியாக விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பள்ளி மாணவிகள், பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு எளிய வழி வகை கொடுக்கும் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவோம். பெண் குழந்தைகளுக்கு மருத்துவ பராமரிப்பு அளிப்போம்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான சமூக பிரச்னைகளை தடுப்போம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கி பேசினர். இதில் பள்ளி ஆசிரியர்கள், காவல்துறையினர் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.