விழுப்புரம்: பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.35,025 அபராதம் விதிக்கப்பட்டது.விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் உறவினர் நினைவு தினத்ைதயொட்டி முதியோர்கள் 25 பேருக்கு அன்னதானம் செய்ய 27.11.2022 அன்று புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பாலமுருகன் ஓட்டலுக்கு சென்று பார்சல் சாப்பாடு விலை கேட்டுள்ளார்.
அவர்கள் ஒரு சாப்பாடு ரூ.80 என்று கூறி சாதம், சாம்பார், கார குழம்பு, ரசம், மோர், கூட்டு, பொறியல், அப்பளம், வாழை இலை, கவர் மற்றும் ஒரு ரூபாய் ஊறுகாய் பொட்டலம் கொடுப்பதாக கூறினர். அதன்படி ரூ.2000 கொடுத்துள்ளார். பின்னர் 28ம் தேதி அரிசி சாக்கு பையில் 25 பார்சல் சாப்பாடு பொட்டலங்களை பிளாஸ்டிக் கவரில் கட்டி கொடுத்துள்ளனர். இதற்கான ரசீது கேட்டபோது பாலமுருகன் டிபன் சென்டர் என சிறிய ரசீது கொடுத்துள்ளார். ஒரிஜினல் ரசீது கொடுக்க மறுத்துவிட்டார். பின்னர் சாப்பாட்டை வாங்கி சென்ற ஆரோக்கியசாமி வீட்டிற்கு சென்று பிரித்து பார்த்தபோது ஊறுகாய் இல்லை. அதற்கான பணம் ரூ.25 திருப்பிதரும்படி கேட்டதற்கு உரிமையாளர் மறுத்துள்ளார்.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஆரோக்கியசாமி விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீரா மொய்தீன், அமலா ஆகியோர், பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காதது சேவை குறைபாடு. இதனால் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.30,000ம், வழக்கு செலவுக்காக ரூ.5,000, ஊறுகாய் பொட்டலத்துக்குரிய ரூ.25ம் சேர்த்து ரூ.35,025ஐ 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். தவறினால் மாதம் ஒன்றுக்கு 9 சதவீதம் வட்டியுடன் பணம் செலுத்த வேண்டுமென்று உத்தரவிட்டனர்.