மண்டபம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம், வேதாளை ஊராட்சிக்கு உட்பட்டது நடுமுனைக்காடு கிராமம். இந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ராமேஸ்வரம் – ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டது. பயணிகள் வசதிக்காக இங்கு நிழற்குடையும் அமைக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் முதல் உச்சிப்புளி வரை செல்லும் நகர் பேருந்துகள், மண்டபம் முதல் ராமநாதபுரம் வரை செல்லும் தனியார் பேருந்துகளும் நடுமுனைக்காடு நகர் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன.
ஆனால், பயணிகள் நிழற்குடையின் பின்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. குறிப்பாக நிழற்குடையின் மேற்பகுதி முழுவதும் கருவேல மர கிளைகளால் மூடப்பட்டுள்ளது. இதனால் பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் நிழற்குடைக்குள் வரும் அபாயம் உள்ளது. மேலும், நிழற்குடை சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே, பயணிகள் நிழற்குடையை சீரமைக்கவும், கருவேல மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நடுமுனைக்காடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.