கடலூர்: கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராசராசன் கால செம்புக் காசு, சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. பச்சை நிறக் கண்ணாடி மணி, ரௌலட்டட் வகை பானை ஓடுகளும் மருங்கூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன.
கண்களுக்கு மைத்தீட்டுவதற்கு உபயோகப்படுத்தப்படும் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் 127 செ.மீ ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சனக்கோல் 4.7செ.மீ நீளமும் 3.6 கிராம் எடையும் கொண்டுள்ளது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் 2ம் கட்ட அகழாய்வு 18.06.2024 அன்று முதல் நடைபெற்று வருகிறது. கண்ணாடி மணிகள், மாவுக் கல் மணிகள், பளிங்கு கல் மணிகள், உட்பட 519 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. நேற்று இரண்டு சூதுபவள மணிகளும் அகேட் வகை கல்மணி ஒன்றும் செவ்வந்தி நிற கல் மணி (Amethyst) ஒன்றும் கிடைக்கப்பெற்றுள்ளன.