வேடசந்தூர் : வேடசந்தூரில் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டவர் திடீரென எழுந்து போலீசாருடன், தான் இறக்கவில்லையென வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்தவர் ராமலிங்கம் (45). பெயிண்டர். இவரும், இவரது நண்பரான சிக்கராம்பட்டியை சேர்ந்த திருப்பதி (50) என்பவரும் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டனர்.
அப்ேபாது ஆத்திரமடைந்த திருப்பதி, ராமலிங்கத்தை கடுமையாக தாக்கி கழுத்தில் கால் வைத்து நெரித்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் திருப்பதியை தள்ளிவிட்டு ராமலிங்கத்தை தூக்கினர். அப்போது அவர் கண்கள் திறந்த நிலையில் உடல் எவ்வித அசைவுமின்றி இருந்தது. இதனால் அவர் இறந்து விட்டதாக நினைத்து, உடனே வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். ஆம்புலன்ஸ் வந்து, ஸ்ட்ரெச்சரில் ஏற்றிய சில நொடிகளிலே திடீரென எழுந்த ராமலிங்கம் கீழே இறங்கி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் போதையில் அவ்வழியாக சென்ற வாகனங்களை மறிக்க முயன்றார். இது அப்பகுதி மக்கள், போலீசாரிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.