திண்டுக்கல், ஜூலை 23: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று குஜிலியம்பாறை தாலுகா நாகையகோட்டை ஊராட்சி பகுதி மக்கள் வந்து கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது: குஜிலியம்பாறை தாலுகா நாகையகோட்டை ஊராட்சி வைவேஸ்புரத்தில் 20க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் குடியிருந்து வருகிறோம்.
எங்கள் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடத்தில் எங்களுக்கு பட்டா வழங்க கோரி கடந்த பல ஆண்டுகளாக தாலுகா அலுவலகம் மனு அளித்தோம். மேலும் கிராம ஊராட்சியில் எங்களுக்கு பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் இதுவரை எங்களுக்கு அந்த இடத்தில் பட்டா வழங்கவில்லை. மேலும் எங்களுக்கு பட்டா வழங்க சிலர் இடையூறு செய்கின்றனர். எனவே கலெக்டர் விசாரணை செய்து எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.