தண்டையார்பேட்டை: வெளி உணவை சாப்பிட அனுமத்திக்க கோரி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை கைதிகள் போராட்டம் நடத்தினர். ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினசரி சிகிச்சைக்காக வருவது வழக்கம். இந்த மருத்துவமனையில் கைதிகளுக்கென தனியாக 4வது தளத்தில் தனி வார்டு உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் கைதிகள் வார்டில் உள்ள நோயாளிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை சார்பில் வழங்கும் சாப்பாடை சாப்பிட மாட்டோம், அந்த சாப்பாடு தரமாக இல்லை, எங்களுக்கு வெளியில் இருந்து கொண்டு வரும் சாப்பாடை சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது. அதைத் தொடர்ந்து மருத்துவமனை அதிகாரிகள், மருத்துவர்கள் கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீங்கள் முறைப்படி ஜெயில் அதிகாரியிடம் அனுமதி வாங்கினால் வெளி உணவை சாப்பிட அனுமதிக்கிறோம் என்று கூறினர். அதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு உணவை சாப்பிட்டனர்.