திருப்பூர், ஜூலை 22: திருப்பூர் மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று மத்திய பேருந்து நிலையத்தில் தெற்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். தொடர்ந்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கெஜராத் பட்டேல் (24) என்பதும், இவர் ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இவரிடம் கஞ்சா பெற இருந்த வளையங்காடு பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி (53) என்பவரையும் தெற்கு போலீசார் காவல் நிலையம் வரவழைத்தனர். தொடர்ந்து கெஜராத் பட்டேல் மற்றும் அழகர்சாமியை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.