பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்தியை அடுத்துள்ள மறவர்பாளையம், குடித்தெருவை சேர்ந்தவர் சின்னையன் (70), இவரது மனைவி சாந்தி (60). இருவரும் நேற்று மொபட்டில் பரமத்தி செல்வதற்காக, கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் பரமத்தி பிரிவு சாலை அருகே சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது கரூரிலிருந்து தர்மபுரி நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியுள்ளது.
இதில் கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலியாகினர். இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த 5 பேர் படுகாயங்களுடன் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.