சென்னை: மாணவர்களின் நலன் கருதி, பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் டெட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை எழிலகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் கட்டிடத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 2023-24ம் ஆம் ஆண்டிற்கான 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வியாண்டு தொடக்கத்திலேயே சிறப்பு வழிக்காட்டி நூல்களை வழங்கியதற்கும், நடப்பாண்டில் ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை சரி செய்யும் விதமாக 105 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 154 பட்டதாரி ஆசிரியர்கள் 537 இடைநிலை ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம் செய்ய ஆணையிட்ட, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இக்கூட்டத்தின் வாயிலாக மாணவர்களின் கல்வி நலன் கருதி ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரிய பணியிடங்களை தொகுப்பூதிய ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் டெட் (TET) தகுதி தேர்வில் தேர்ச்சி என்பதற்கு விலக்களித்து பணி நியமனம் செய்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.