ஒரத்தநாடு, ஜூலை 21: திருவோணம் பகுதியில் ஏரி-குளங்களில் மண் எடுத்துச்செல்லும் டிராக்டர்கள் அதிவேகத்தில் இயக்குவதால் மகள் அச்சத்தில் பயணம் செய்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணத்தில் அதிவேகத்தில் இயக்கப்படும் டிராக்டர்கள் ஏரி-குளங்களில் வண்டல் மற்றும் சவுடு மண் எடுத்து விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்ததுள்ளது. இதையடுத்து தஞ்சை மாவட்டம் திருவோணம் பகுதியில் உள்ள சில ஏரி-குளங்களின் மண் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. அப்போது அனுமதிக்கப்பட்ட உத்தரவில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றாமல், ஏரி-குளங்களில் மண் அதிகளவில் வெட்டி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த மண்ணை டிராக்டர்களில் வெளியூர்களுக்கு கொண்டு சென்று சிலர் விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த மண்ணை டிராக்டர்களில் சாலை மார்க்கமாக கொண்டு செல்லும்போது வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகிறது, பின்பக்க கதவை மூடுவதில்லை. எந்தவித பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் செல்வதோடு, போக்குவரத்திற்கு இடையூறாக மண்ணை ஏற்றி செல்லும் டிராக்டர்கள் சாரை – சாரையாக அணிவகுத்து செல்கிறது. கடந்த 18ம் தேதி டிராக்கடர் மோதி ஒரு பெண் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.