வேலாயுதம்பாளையம், ஜூலை 21: கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே சின்ன நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரப்பன் ( 73). விவசாயி. இவருக்கு மூட்டு வலி மற்றும் தோள்பட்டை வலி இருந்து வந்தது. இவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று மூட்டு வலி மற்றும் இடுப்பு வலிக்கு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் வயது முதிர்ச்சி காரணமாக மூட்டு வலி மற்றும் தோள்பட்டை வலி சரியாகவில்லை. இதனால் வலி தாங்க முடியாமல் விரக்தியில் மாரப்பன் வீட்டில் இருந்து வந்தார்.இந்நிலையில் விரக்தியில் இருந்த மாரப்பன் வீட்டில் யாரும் இல்லாத போது தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் விஷ மாத்திரையை எடுத்து சாப்பிட்டுள்ளார். பின்னர் தனது மனைவி பாப்பாயி (68) என்பவரிடம் நான் விஷமாத்திரை குடித்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாரப்பனை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாப்பாயி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார் . புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.