வேலூர், ஜூலை 21: வேலூர் மாவட்டம் அல்லேரி, பேரணாம்பட்டு மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்பி மணிவண்ணன் தெரிவித்துள்ளார். எஸ்பி மணிவண்ணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து கள்ளச்சாராய பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கையின் தொடர்ச்சியாக நேற்று காலை முதல் மாலை வரை ஏடிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில், குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரன், குடியாத்தம், வேலூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், வேலூர் தெற்கு, வேப்பங்குப்பம், பேரணாம்பட்டு, குடியாத்தம் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் அதிரடி சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த ரெய்டு, பேரணாம்பட்டு சாத்கர் மலை கங்காசாகரம், நிம்ப கானாறு, பூங்குளம், செம்மனேரி, சிவனகிரி பகுதிகளிலும், அல்லேரி மலையில் அவுசாரி ஓடை, மாமரத்து ஓடை, பீஞ்சமந்தை மலைப்பகுதியில் தேக்குமரத்து ஓடை, முள்ளுவாடி வனப்பகுதிகளிலும் நடந்தது. இதில் எங்கும் கள்ளச்சாராய ஊறல்களோ, கள்ளச்சாராயமோ அல்லது பதுக்கல் கள்ளச்சாராய மூலப்பொருட்களோ கைப்பற்றப்படவில்லை. போலீசாரின் தொடர் நடவடிக்கையின் காரணமாக கள்ளச்சாராயம், ஊறல் ஏதும் கைப்பற்றப்படவில்லை. அதன் நடமாட்டம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்பி மணிவண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.