சென்னை: சென்னை விமான நிலையம் வழியாக 267 கிலோ தங்கம் கடத்திய விவகாரத்தில் பாஜக பிரமுகர் பிருத்வியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கக் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஷபீர் அலி, விமான நிலையத்தில் கடை பெற பிருத்வி உதவிய புகாரில் விசாரணை நடைபெற்ற வருகிறது. விமான நிலையத்தில் கடைபெற ரூ.77 லட்சம் பணப்பரிவர்த்தனை செய்த ஆவணத்தை காட்டி பிருத்வியிடம் கேள்வி எழுப்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிருத்வி இயக்குநராக இருந்த வித் வேதா பிஆர்ஜி நிறுவனமே விமான நிலையத்தில் கடைகளை நடத்த உரிமம் பெற்றுள்ளது. வித் வேதா நிறுவனம் ஷபீர் அலிக்கு கடை ஒதுக்கியதில் பிருத்விக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் சுங்கத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.
267 கிலோ தங்கம் கடத்தல் 6 பேருக்கு சம்மன்
பிருத்வி வாக்குமூலத்தின் பேரில் விமான நிலைய இணை பொது மேலாளர் செல்வநாயகம் உட்பட 6 பேருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக பிரமுகரான பிருத்வியை மீண்டும் விசாரணைக்கு அழைக்கவும் சுங்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே பிருத்விக்கு சொந்தமான இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.