புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் நாற்காலியில் 5 மாணவர்கள் கும்பலாக நிற்பதும், அதில் ஒரு மாணவர் பட்டா கத்தியை மேஜை மீது குத்தி நிறுத்தி வைத்துள்ள புகைப்படத்துடன், பின்னணியில் கானா பாடல் ஓடும் வீடியோ இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து புதுச்சேரி போலீசார் மாணவர்களின் சீருடையை வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது லாஸ்பேட்டையில் உள்ள அரசு தொழில்நுட்ப பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 5 பேர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து லாஸ்பேட்டை போலீசார் அந்த பள்ளிக்கு சென்று, வகுப்பறையில் கத்தியுடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட 5 மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சினிமாவில் வருவது போல் விளையாட்டுத்தனமாக எடுத்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவன் ஒருவன் வீட்டில் இருந்த பட்டா கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வழக்குப்பதிவு செய்யவில்லை. அதேசமயம் 5 மாணவர்களையும் 15 நாள் சஸ்பெண்ட் செய்து பள்ளி முதல்வர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.