சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை, சேலம் மாநகர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் கொலை, மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் கொலை என்று கட்சி பேதமின்றி பல கொலைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன.
இவற்றில் ஒருசில கொலை நிகழ்வுகளை தவிர, ஏனைய குற்றங்களில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழகத்தில் சென்னை மாநகரில் மட்டும் 86 கொலை சம்பவங்கள் அரங்கேறி முதலாவது இடத்தை பிடித்துள்ளது. போர்க்கால அடிப்படையில் கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.