பெங்களூரு: வடகனரா மாவட்டம் ஷிரூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுவிட்ட நிலையில், கேரளாவை சேர்ந்த அர்ஜுன் என்ற ஓட்டுநரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. மொத்தமாக 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. வடகனரா மாவட்டம் ஷிரூர் அருகே கடந்த 16ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், 7 பேருடைய உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை 66ல் ஷிரூர் அருகே ஒரு குடும்பம் சிறிய ஓட்டல் ஒன்றை நடத்திவந்தது.
நிலச்சரிவில் அந்த குடும்பத்தை சேர்ந்த 4 பேர், டேங்கர்களை நிறுத்திவிட்டு அங்கு டீ குடித்துக்கொண்டிருந்த டேங்கர் லாரி ஓட்டுநர்கள் ஆகியோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். ஓட்டல் நடத்திவந்த லட்சுமண் நாயக், சாந்தி நாயக் மற்றும் அவர்களது மகன் ரோஷன், மகள் அவந்திகா, தமிழ்நாட்டைச் சேர்ந்த டேங்கர் ஓட்டுநர்கள் முருகன் மற்றும் சின்னா ஆகிய 6 பேருடைய உடல்களும் மீட்கப்பட்டன. இவர்களுடன் அடையாளம் தெரியாத நபர் ஒருவருடைய உடலும் மீட்கப்பட்டது. எனவே இதுவரை மொத்தமாக 7 பேருடைய உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களது உடல்களும் தேடப்பட்டு வருகிறது.
டேங்கர் ஓட்டுநர்கள் 3 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த முருகன் மற்றும் சின்னா ஆகிய 2 ஓட்டுநர்களின் உடல்கள் மீட்கப்பட்டுவிட்டன. அர்ஜுன் என்ற மற்றொரு ஓட்டுநரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், அவர் கேரள மாநிலம் கோழிக்கோடை சேர்ந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது. அவரது உடல் மற்றும் லாரி தேடப்பட்டுவருகிறது. நிலச்சரிவு ஏற்பட்டதிலிருந்தே தீயணைப்புத்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தீவிர மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தொடர் மழை மீட்புப்பணிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது அதை சுற்றிய மற்ற பகுதிகளிலும் நிலச்சரிவுகள் ஏற்படுவதால் மீட்புப்பணிகள் தாமதமாகின்றன.
இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய போலீஸ் எஸ்.பி நாராயணா, இடிபாடுகளை அகற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கர்நாடக போலீசார் எடுத்துவருகின்றனர். ஆனால் தொடர் மழை மீட்புப்பணிகளுக்கு இடையூறாக உள்ளது. ஆனாலும் உயிரிழந்த அனைவரது உடல்களையும் மீட்டுவிடுவோம் என்று உறுதியாக நம்புகிறோம். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஓட்டுநர் அர்ஜுன் குடும்பத்திற்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். லாரியும் தேடப்பட்டுவருகிறது. கண்டிப்பாக கண்டுபிடித்துவிடுவோம் என்று கூறினார். தொடர் மழை மற்றும் மீட்புப்பணிகள் காரணமாக தேசிய நெடுஞ்சாலை 66ல் வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஓட்டுநர் அர்ஜுன் உடல் தீவிரமாக தேடப்பட்டுவரும் நிலையில், அர்ஜுனுக்கு போன் செய்தபோது 2 முறை ரிங் அடித்ததாகவும், ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்றும், அவரது லாரி இடிபாடுகளுக்கடியில் சிக்கியிருக்கலாம் என்றும் அர்ஜுன் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். ஓட்டுநர் அர்ஜுன் கேரளா மாநிலம் கோழிக்கோடை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததும், அவரது உடலை மீட்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் மாநில தலைமை செயலாளர் வி.வேணுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீஷன், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமாரிடம் இதுகுறித்து போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, அர்ஜுன் உடலை மீட்க உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு டி.கே.சிவகுமாரிடம் கேட்டுக்கொண்டார். மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாக டி.கே.சிவகுமார் தெரிவித்திருக்கிறார். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஓட்டுநர் அர்ஜுன் குடும்பத்திற்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். லாரியும் தேடப்பட்டு வருகிறது. கண்டிப்பாக கண்டுபிடித்துவிடுவோம்.