சென்னை : வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இரு ஒரு சில இடங்களில் 7 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தமிழகம், புதுச்சேரியில் 7 நாட்கள் மிதமான மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இது இந்திய வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை பூரி கடற்கரை அருகே கரையை கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் அதிக கனமழைக்கும், கேரளாவில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 21 செ.மீ.க்கும் அதிகமாக அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் 12 முதல் 20 செ.மீ. வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.