நோ ஆயில் நோ பாயில்
இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே நெருப்பு மற்றும் எண்ணெயைப் பயன்படுத்திதான் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. அடுப்பு இல்லாமல் உணவு தயாரிக்க முடியாது என்பதுதான் பலரது கருத்தாக இருக்கிறது. ஆனால், இந்தப் பேச்சுக்கெல்லாம் விடை கிடைத்தது மாதிரி அடுப்பு மற்றும் எண்ணெய் பயன்படுத்தாமல் மூன்று வேளை உணவுகளையும் தயாரித்து வழங்குகிறது பள்ளிக்கரணையில் இயங்கி வரும் நோ ஆயில் நோ பாயில் என்ற உணவகம். பெரும்பாலும் சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற இந்த உணவகத்தில் சாம்பார், வடை, கூட்டு, பொரியல் எனத் தொடங்கி சுரைக்காய் ஊறுகாய், தாமரைப்பூ வடை, செம்பருத்தி ஜூஸ், துளசி ரசம் என பதினாறு வகையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
ஐஸ்கிரீம் தாளி
பெரிய உணவகங்களில் ஒரு பெரிய பாத்திரத்தில் நிறைய உணவுகள் வைத்து தாளி எனக் கொடுப்பார்கள். அதில் பலதரப்பட்ட உணவுகள் இருக்கும். இந்தத் தாளி ஸ்டைல் உணவு மாதிரி ஐஸ்கிரீம் தாளி எனக் கொடுத்தால் எப்படி இருக்கும்! ஆமாம், ராயபுரத்தில் இருக்கிற ஸ்கூப்ஸ் அண்ட் சேக்ஸ் என்கிற ஐஸ்கிரீம் கடையில் இப்படியொரு தாளி கிடைக்கிறது. இருபத்தி மூன்று வகை ஐஸ்கிரீம்கள் இருக்கிற இந்தக் கடைக்கு ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு பல தரப்பினரும் விசிட் அடிக்கிறார்கள். குறிப்பாக இந்தக் கடையில் கிடைக்கும் ஐஸ்கிரீம் தாளியை சாப்பிட நண்பர்களோடு செல்கிறார்கள் பலர். இந்தத் தாளியில் எட்டு வகையான ப்ளேவரில் ஐஸ்கிரீம் கொடுப்பதால் இதனை சுவைத்துப் பார்க்க தனிக்கூட்டமே வடசென்னை விரைகிறது.
ஃபிஷ் சவர்மா
நாம் அனைவருமே சவர்மா சாப்பிட்டு இருப்போம். ட்ரண்டிங் உணவாகவும் ஈவ்னிங் ஸ்னாக்ஸாகவும் இருக்கிற இந்த சவர்மா, சிக்கன் மற்றும் மட்டனில் தயாரிக்கப்படுகிறது. நாம் இதை இரண்டையும் சாப்பிட்டுப் பார்த்திருப்போம். ஆனால், மீனில் சவர்மா சாப்பிட்டு இருக்கிறீர்களா? சாப்பிடவில்லை என்றால் கொடுங்கையூரில் இருக்கிற ‘விஐபி சீ ஃபுட் ஃபிஷ் சவர்மா’ என்கிற கடைக்கு சென்று சுவைத்துப் பார்க்கலாம். ஃபிஷ்சில் மிரட் ஆம்லேட், சாண்ட்விச், பிரியாணி என பல உணவுகள் கிடைக்கும் இந்த கடை அந்தப் பகுதியில் ஃபுட் ஸ்பாட் ஆக மாறி இருக்கிறது.