சென்னை: அதிமுக நிர்வாகி மலர்க்கொடியை பதவியில் இருந்து நீக்கம் செய்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார் திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மலர்க்கொடி (49), பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தமாகா வக்கீல் அணி நிர்வாகி பிரவீன் என்ற ஹரிஹரன் (27), திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (28) ஆகிய மூவரையும் கைது செய்தனர். இந்நிலையில் அதிமுக நிர்வாகி மலர்க்கொடியை பதவியில் இருந்து நீக்கம் செய்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, மலர்கொடி சேகர்,(திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.