சேலம்: சசிகலா ஒரு செல்லாத காசோலை, அவரது ஆடி மாத சுற்றுப்பயணம் எதற்கும் பயன்தராது என அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறினார். அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை கூறியதாவது: ஆடி மாதம் முதல்நாள், சசிகலா பயணத்தை தொடங்கியுள்ளார். ஆடி மாதம் ஆன்மிகத்திற்கு உகந்த மாதம். இம்மாதத்தில் சுபகாரியங்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். ஆனால் அவர் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இது எந்த பயனையும் தராது. சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அதிமுகவில் உறுப்பினராகவும் அவர் இல்லை. அதிமுகவை ஒன்றிணைக்கப்போவதாக ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி,குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார். அவரை யாரோ தூண்டி விடுகிறார்கள். சசிகலாவை பொறுத்தவரை செல்லாத காசோலை. அது எதற்கும் உதவாது. எம்ஜிஆர், ஜெயலிதாவுக்கு பிறகு அதிமுகவில் ஆளுமையுள்ள தலைவர்கள் இல்லை. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, கட்சியை கட்டுப்கோப்பாக வைத்துள்ளார். அவரது தலைமையை எல்லோரும் ஏற்று கட்டுப்பட்டவர்களாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.