ஊட்டி: ஈரோடு கலெக்டரின் மனைவி நீலகிரி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டராக ராஜகோபால் சுன்கரா பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி பாவ்யா தன்னீரு. இவர் ஈரோடு வணிக வரித்துறை இணை ஆணையராக பணியாற்றி வந்தார். தற்போது அவர் நீலகிரி மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றார். இவர் நீலகிரி மாவட்டத்தின் 116வது கலெக்டரும், 7வது பெண் கலெக்டரும் ஆவார்.
இவர் கடந்த 2015ல் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர். கலெக்டராக பதவி ஏற்றபின் லக்ஷ்மி பவ்யா தன்னீரு நிருபர்களிடம் கூறியதாவது: 156 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீலகிரி மாவட்டத்தின் கலெக்டராக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு வாய்ப்பு அளித்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி. மக்களின் பிரச்னைகள் அனைத்தையும் அறிந்து கடைக்கோடி மக்களுக்கும் அனைத்து அரசின் நலத்திட்டங்களும் சென்றடைய நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு லக்ஷ்மி பவ்யா தன்னீரு கூறினார்.