புனே: மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் பூஜா கேத்கர்(34) யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று, புனே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். அங்கு தனக்கு தனி அறை மற்றும் கேபின் கேட்டு அடம்பிடித்த பூஜா கேத்கர், தனது காரில் சட்டத்துக்கு புறம்பாக சிவப்பு சுழல் விளக்கை பொருத்தி சர்ச்சையில் சிக்கினார். அதுமட்டுமின்றி பூஜா கேத்கர் ஐஏஎஸ் பதவியை பெறுவதற்காக, ஊனமுற்றோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்காக சான்றிதழை போலியாக சமர்ப்பித்து முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த சர்ச்சையைத் தொடர்ந்து பூஜா கேத்கரின் பயிற்சி முடிவதற்குள், அவர் புனேவில் இருந்து வாஷிம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பூஜா கேத்கர் மீதான இந்த புகார் தொடர்பாக விசாரிக்க ஒன்றிய அரசு தனிநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் பயிற்சியை நிறுத்தி வைத்து மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக ஜூலை 23ம் தேதிக்குள் முசோரியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்கு திரும்ப வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே புனே கலெக்டர் தன்னை துன்புறுத்தியதாக போலீசில் பூஜா புகார் செய்துள்ளார்.