சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலின் போது நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பணம் எடுத்து செல்லப்பட்ட நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளாலும், காவல்துறை அதிகாரிகளாலும் பறிமுதல் செய்தனர். இந்த பணம் நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் என்று கைது செய்யப்பட்ட 3 பேர் தெரிவித்தனர். இதனடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு இதில் தொடர்புடைய நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தும் பணி என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக இந்த ரூ.4 கோடி பணம் தமிழக பாஜகவினர் மூலமாக பணப்பட்டுவாடா செய்வதற்காக கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நயினார் நாகேந்திரன் தொடர்பான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான ஆதாரங்களையும் சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஏற்கனவே இந்த விவகாரத்தில் தமிழக பாஜக நிர்வாகிகள் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட நயினார் நாகேந்திரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்தார். இந்த நிலையில் இன்று சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் ஆனார்.
நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் ஆகியுள்ளார். சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜரானார்.
நயினார் நாகேந்திரனிடம் CBCID அதிகாரிகள் விசாரணை
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் வைத்து விசாரணை நடத்த உள்ளனர். ரூ.4 கோடி பண விவகாரத்தில் எந்த அளவு தொடர்பு உள்ளது. கைது செய்யப்பட்ட 3 நபர்களும் உங்கள் பெயரை குறிப்பிட்டதால் பணம் உங்களுடையதா?. சம்பந்தபட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட இருப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணை என்பது இன்று மாலை வரை நடைபெறும் என சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.