புனே: மகாராஷ்ரா மாநிலம் புனே கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர், தனி அறை மற்றும் கேபின் கேட்டதுடன் தனது காரில் சட்டத்துக்கு புறம்பாக சிவப்பு சுழல் விளக்கை பொருத்தி சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து அவர் இடம் மாற்றம் செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி ஐஏஎஸ் பதவியை பெறுவதற்காக அவர் சிவில் சர்வீஸ் தேர்வு முகமையில் போலி சான்றிதழ் சமர்ப்பித்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஓபிசி ஒதுக்கீட்டை அவர் தவறாக பயன்படுத்திக் கொண்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தனிநபர் விசாரணை ஆணையத்தை அமைத்த ஒன்றிய அரசு விசாரித்து வருகிறது. இதனிடையே பூஜா கேத்கரின் தாய் மானோரமா கேத்கர், நில விவகாரம் தொடர்பாக, புனே மாவட்டம் முல்ஷி தாலுகா தத்வாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வீடியோ வைரலானது. இதையடுத்து, பூஜா கேத்கரின் தாய் மனோரமா கேத்கர், தந்தை திலீப் கேத்கர் மற்றும் 5 பேர் என மொத்தம் 7 பேர் மீது புனே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.