மதுரை: ராமநாதபுரத்தை சேர்ந்த சுகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம் செவ்வூர் ஊராட்சியில் நடந்த ஊரக வேலை உறுதி திட்டத்தில் நிதிமுறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பான வழக்கில் கலெக்டர் 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டது. ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சேஷசாயி, விக்டோரியாகவுரி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ராமநாதபுரம் கலெக்டர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், போகலூர் வட்டார வளர்ச்சி அலுவலர், உதவிசெயற்பொறியாளர், பணிமேற்பார்வையாளர் என 3 பேர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.