சென்னை: காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் மாநிலம் முழுவதும் எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் 2022ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்த திட்டம் இன்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தாளான இன்று திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார். இதன் மூலம் மொத்தமுள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் பயிலும் 2.23 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளனர்.
இந்நிலையில், காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் மாநிலம் முழுவதும் எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். காலை உணவுத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் டேஷ்போர்டு வழியாக முதல்வர் ஆய்வு செய்தார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பாக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது; “தமிழ்நாடு காலை உணவித் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுக்க எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை முதலமைச்சர் டேஷ்போர்டு வழியாகக் கண்காணித்து, மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன்!” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.