மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், பரவலாக மழை பெய்வதால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் கபிணி அணையில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 5ஆயிரம் கனஅடிக்கும் மேலும் என 25ஆயிரம் கனஅடிக்கும் அதிகமான உபரிநீர், காவிரியில் திறக்கப்படுகிறது.
இந்த தண்ணீர் நாளை காலைக்குள் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து 4,013 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கனஅடி திறக்கப்படுகிறது. நேற்று முன்தினம் 42.30 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 42.76 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 13.55 டிஎம்சியாக உள்ளது.