புனே: புனே கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர், தனி அறை மற்றும் கேபின் கேட்டதுடன் தனது காரில் சட்டத்துக்கு புறம்பாக சிவப்பு சுழல் விளக்கை பொருத்தி சர்ச்சையில் சிக்கினார். அதுமட்டுமின்றி ஐஏஎஸ் பதவியை பெறுவதற்காக சிவில் சர்வீஸ் தேர்வு முகமையில் போலி சான்றிதழ் சமர்ப்பித்து ஊனமுற்றோர் மற்றும் ஓபிசி ஒதுக்கீட்டை அவர் தவறாக பயன்படுத்திக் கொண்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக விசாரிக்க ஒன்றிய அரசு தனிநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த சர்ச்சையைத் தொடர்ந்து பூஜா கேத்கர் தனது பயிற்சி முடிவதற்குள், புனேவில் இருந்து வாஷிம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் புனேவில் பணிபுரிந்த போது பூஜா கேத்கர் பயன்படுத்திய சைரன் பொருத்தப்பட்ட சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.