திருமலை: தெலங்கானாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ மற்றும் எம்எல்சிக்கள் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சிக்கு தாவி வருகின்றனர். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான தனது மகள் கவிதாவை வெளியே கொண்டு வர பிஆர்எஸ் கட்சியின் நிறுவன தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரசேகரராவ் தீவிர முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில் கவிதாவின் தம்பியும், பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவ், முன்னாள் அமைச்சர் ஹரீஸ்ராவ் ஆகியோர் கடந்த 4 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் கவிதாவை சிறையில் சந்தித்து பேசி வந்தனர். அத்துடன் பாஜக தேசிய தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஜே.பி.நட்டாவை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது பிஆர்எஸ் கட்சியை பாஜகவில் இணைப்பது குறித்து பேசப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதை பிஆர்எஸ் கட்சியினர் உறுதி படுத்தவில்லை.