நாகர்கோவில்: கன்னியாகுமரி – அசாம் மாநிலம் திப்ரூகர் இடையே இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று கன்னியாகுமரி வந்து பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்வதற்காக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. மதியம் ஒரு மணியளவில், ரயில் பெட்டிகளை யார்டுக்கு கொண்டு செல்வதற்காக இன்ஜினை பொருத்தினர்.
அப்போது, பலத்த சத்தத்துடன், இன்ஜின் இணைக்கப்பட்ட ரயில் பெட்டி தடம் புரண்டது. நான்கு சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து இறங்கின. இதனையடுத்து, விவேக் எக்ஸ்பிரசின் இதர பெட்டிகள் வேறு இன்ஜின் மூலம் யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டன. மாலையில் திருவனந்தபுரத்தில் இருந்து மீட்பு ரயில் வரவழைக்கப்பட்டு, தடம் புரண்ட சக்கரங்களை தண்டவாளத்தில் நிறுத்தி இன்ஜின் இணைக்கப்பட்ட பெட்டி பராமரிப்பு பணிக்கு கொண்டு செல்லப்பட்டது.