வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஜோ பைடனுக்கு இந்திய அமெரிக்கர்களின் ஆதரவு 19 சதவீதம் சரிந்துள்ளது. அமெரிக்காவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபராக இருக்கும் ஜோ பைடனே மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஏசியன் மற்றும் பசிபிக் ஐலேண்டர் அமெரிக்கன் வோட், ஏசியன் அமெரிக்கன்ஸ் அன்வான்சிங் ஜஸ்டிஸ் மற்றும் ஏஏஆர்பி ஆகிய அமைப்புக்களால் ஆசிய அமெரிக்க வாக்களார்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு ஆய்வு அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையில் 46 சதவீத இந்திய அமெரிக்கர்கள் அதிபர் பைடனுக்கு வாக்களிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இது கடந்த 2020ம் ஆண்டில் 65 சதவீதமாக இருந்தது. அதிபர் பைடனுக்கு தற்போது இந்திய அமெரிக்கர்களின் ஆதரவு 19 சதவீதம் குறைந்துள்ளது. அதிபர் பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே கடந்த 27ம் தேதி நடந்த நேரடி விவாதத்துக்கு முன் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 46 % ஆசிய அமெரிக்கர்கள் பைடனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது கடந்த 2020ம் ஆண்டை காட்டிலும் 8 % குறைவாகும்.