சென்னை : மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தாழ்தளப் பேருந்துகள் மற்றும் இருக்கை, படுக்கை வசதிகள் கொண்ட விரைவு பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தமிழக அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்டு வந்த தாழ்தள பேருந்துகள் சேவை கடந்த 2018ம் ஆண்டு நிறுத்தப்பட்டன. இதனிடையே 2024 – 2025ம் ஆண்டு நிதியாண்டிற்குள் 7682 புதிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. அதன் ஒருபகுதியாக தற்போது மீண்டும் தாழ்தள பேருந்துகள் சேவைகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 350 தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே போல் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 200 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. படுக்கை மற்றும் இருக்கை வசதிகளுடன் இந்த பேருந்துகள் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாணிக் பட்டன் வசதிகள் பேருந்துகளில் அமைக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.