திண்டுக்கல், ஜூலை 11: திண்டுக்கல் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஈஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குருசாமி வரவேற்றார். ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து துவக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில பொது செயலாளர் கிருஷ்ணசாமி கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில தலைவர் ராமநிதி வாழ்த்துரை வழங்கினார். போராட்டத்தில், ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், கணினி இயக்குபவர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை பாரத இயக்ககம் சமூக தணிக்கை மற்றும் மகளிர் திட்டத்தில் பணிபுரியும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள பயிற்றுநர், வட்டார இயக்க மேலாளர்களுக்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இணையான ஊதிய வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட செயலாளர் செல்வராணி நன்றி கூறினார்.