சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் கடந்த 5ம் தேதி பெரம்பூரில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வழக்கில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரப்படும் எனவும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் எனவும் முதலமைச்சர் உறுதியளித்தார். சென்னை அயனாபுரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது திருவுருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தினார்.