ஈரோடு, ஜூலை 9: அரசு பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளுக்கு அனுப்பபட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வங்களில் உள்ள உபகரணங்களை பராமரித்தல்,இருப்பு பதிவேடு பராமரித்தல், ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வக உதவியாளர் மேற்பார்வையின் கீழ் ஆய்வகத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட பணியினை தலைமையாசிரியர் ஆய்வு செய்து தூய்மையாகவும், உரிய பாதுகாப்பில் உள்ளதா என்பதையும் உறுதிபடுத்த வேண்டும்.இப்பணிகளை 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை 3 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். பணிகள் முடிக்கப்பட்டு ஆய்வகம் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்திடும் வகையில் போட்டோ அல்லது வீடியோ பதிவு செய்து பள்ளிக்கல்வித்துறையின் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.